தமிழக அரசியலின் பீஷ்மராகக் கருதப்படும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தற்போது தனது அரசியல் வாழ்வின் மிக இக்கட்டான காலகட்டத்தை எதிர்கொண்டு வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட அவருக்கு, நடந்து முடிந்த இந்தத் தேர்தல் களம் இதுவரை இல்லாத அளவிற்கு மன அழுத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. குறிப்பாக, வயது மூப்பு காரணமாக அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று தலைமை கருதிய நிலையில், பிடிவாதமாகப் போட்டியிட வாய்ப்புப் பெற்ற துரைமுருகனுக்கு, இப்போது சொந்தத் தொகுதியான காட்பாடியிலேயே உட்கட்சிச் சூழ்ச்சிகள் வலைவிரித்துள்ளது அவரை நிலைகுலையச் செய்துள்ளது.
தேர்தல் முடிந்த கையோடு பூத் வாரியாக வாக்குகளை ஆய்வு செய்த துரைமுருகனுக்கு, அதிர்ச்சிகரமான தகவல்களே கிடைத்துள்ளன. திமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் கூட வாக்குப்பதிவு சதவீதம் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருப்பதும், கட்சிக்குள்ளேயே இருக்கும் சில முக்கியப் புள்ளிகள் அவருக்கு எதிராக ரகசிய வேலைகளைச் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தத் துரோகங்கள் குறித்து தனது மகன் கதிர் ஆனந்த் மூலம் தகவல்களைப் பெற்ற துரைமுருகன், வெற்றி வாய்ப்பு ஊசலாடுவதை எண்ணி மிகுந்த மனவேதனையில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வெற்றி-தோல்வி ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவருக்குக் காத்திருக்கும் அடுத்த சவால் இன்னும் பெரிதாக உருவெடுத்துள்ளது. அடுத்த அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் என்றும், ஒருவேளை அவர் அமைச்சராக நீடிக்க விரும்பினால், கட்சியின் மிக உயரிய பதவியான ‘பொதுச்செயலாளர்’ பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஸ்டாலின் தரப்பு முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. “பதவியா அல்லது அங்கீகாரமா?” என்ற இந்த இரட்டைச் சிக்கல் அவரை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
தன்னுடைய நீண்ட கால அரசியல் விசுவாசத்திற்குப் பரிசாகக் கிடைத்த பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதை துரைமுருகனால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருபுறம் தொகுதியில் அரங்கேறியுள்ள உட்கட்சி மோதல்கள், மறுபுறம் அதிகாரப் பகிர்வு குறித்த தலைமையின் கறார் நகர்வுகள் என இருமுனைத் தாக்குதல்களை அவர் சந்தித்து வருகிறார். காட்பாடி தொகுதியின் தேர்தல் முடிவுகளும், அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவுகளுமே இந்தப் பழம்பெரும் தலைவரின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்றன.
