அயல்நாட்டில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் உணர்வுப்பூர்வமான வலியைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு இந்தியப் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் வசித்து வரும் அந்தப் பெண், இந்தியாவில் நடக்கும் தனது நெருங்கிய உறவினரின் (Cousin) திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனது குறித்து மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ளார். “அயல்நாட்டில் வசிப்பதற்கான உண்மையான விலை இதுதான்” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது பலரின் கண்களைக் குளமாக்கியுள்ளது.
தனது குடும்பத்தின் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்படும் திருமணத் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கும்போது தனக்கு அழுகை வருவதாகவும், தனது பெரிய மார்வாரி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் அந்தத் தருணத்தில் தான் மட்டும் தனியாக இருப்பதையும் அவர் வீடியோவில் விவரித்துள்ளார். பணத்தைச் சம்பாதிப்பதற்காக ஊரை விட்டுப் பிரிந்து வந்தாலும், இது போன்ற மகிழ்ச்சியான தருணங்களை இழப்பதுதான் புலம்பெயர்ந்தவர்கள் செலுத்தும் மிகப்பெரிய விலை என்று அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த பலரும், “நீங்க மட்டும் இல்ல, எங்களைப் போன்ற பலரின் கதையும் இதுதான்” எனத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். வேலை மற்றும் எதிர்காலத்திற்காகப் பல மைல் தொலைவில் இருந்தாலும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் ஏற்படும் தனிமையையும் இந்த வீடியோ மிகச் சரியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
