ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கிக் கிடந்த ஹார்முஸ் நீரிணை வழியாக, முதல் முறையாக திரவ இயற்கை எரிவாயு (LNG) சரக்கு கப்பல் வெற்றிகரமாகப் பயணித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘முபாரக்’ என்ற இந்தக் கப்பல், உலக எரிசக்தி சந்தையில் நிலவி வந்த பெரும் கவலையைத் தணிக்கும் ஒரு நம்பிக்கைக் கீற்றாகப் பார்க்கப்படுகிறது. உலகின் மொத்த எல்என்ஜி விநியோகத்தில் சுமார் 20% இந்த முக்கிய நீரிணை வழியாகவே நடைபெறுவதால், இந்தப் பாதையின் முடக்கம் உலகளாவிய எரிவாயு விலையை விண்ணைத் தொடச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு (ADNOC) சொந்தமான இக்கப்பல், மார்ச் தொடக்கத்தில் தாஸ் தீவில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. போர்ச் சூழல் காரணமாகப் பாதுகாப்புக் கருதி மார்ச் 31-ம் தேதி தனது டிரான்ஸ்பாண்டர் சிக்னல்களை அணைத்த முபாரக் கப்பல், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ரேடார் பார்வையில் இருந்து மறைந்திருந்தது. பின்னர் ஏப்ரல் 27-ம் தேதி இந்தியாவின் மேற்குப் பகுதியில் மீண்டும் சிக்னல் காட்டிய இக்கப்பல், தற்போது இந்தியாவின் தெற்கு முனையைக் கடந்து சீனாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஹார்முஸ் நீரிணையில் நிலவும் அச்சுறுத்தல் காரணமாகப் பல நாடுகளின் கப்பல்கள் பாதியிலேயே திரும்பிச் சென்ற நிலையில், முபாரக் கப்பல் கையாண்ட உத்தி முக்கியத்துவம் பெறுகிறது. கண்காணிப்பில் இருந்து தப்பிக்க சிக்னல்களை அணைத்துவிட்டுப் பயணிக்கும் மறைமுக முறையைப் பயன்படுத்தி இது வெற்றிகரமாக வெளியேறியுள்ளது. இந்தியா முதல் தைவான் வரை ஆசிய நாடுகள் பலவற்றிலும் தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதால், இந்தக் கப்பலின் வருகை ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த ஒரு கப்பலின் பயணம் மட்டுமே உலகச் சந்தையைச் சீராக்கிவிடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கினால் மட்டுமே, எல்என்ஜி மற்றும் கச்சா எண்ணெய் விலையில் நிலையான சரிவு ஏற்படும். ஹார்முஸ் நீரிணை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினால் மட்டுமே ஆசிய நாடுகளின் எரிசக்தித் தட்டுப்பாடு நீங்கும் என்பதால், வரும் வாரங்களில் இந்தப் பாதையில் நிகழும் நகர்வுகள் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.
