தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 85.15% என்ற சாதனை அளவைத் தொட்டுள்ள நிலையில், முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் காத்திருக்கிறது. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 233 வேட்பாளர்களையும் பனையூர் இல்லத்திற்கு அழைத்து ‘ராஜவிருந்து’ அளிக்கத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் களம் கண்ட வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கடின உழைப்பைப் பாராட்டுவதோடு, முடிவுகள் எப்படி அமைந்தாலும் தொண்டர்களைத் தொய்வின்றி வைத்திருக்க வேண்டும் என்பதே விஜய்யின் இந்தத் திடீர் மூவ்க்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் தவெக கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதிலும், சென்னையில் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு முன்னேறியிருப்பதிலும் தவெகவின் தாக்கம் தெரிகிறது. பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாகக் கிடைத்திருப்பதும் கட்சிக்குள்ளே பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. இந்த உற்சாகத்தைத் தற்காத்துக்கொள்ளவே, முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தனது படைத்தளபதிகளை நேரில் சந்தித்து விஜய் உரையாற்ற உள்ளார்.
வெற்றி-தோல்வி எதுவாக இருந்தாலும், அடுத்தகட்டமாகத் தவெகவை ஒரு வலுவான எதிர்க்கட்சியாகவோ அல்லது ஆளுங்கட்சியாகவோ நிலைநிறுத்த விஜய் வியூகம் வகுத்துள்ளார். ஒருவேளை ஆட்சியைப் பிடிக்கத் தவறினாலும், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் விரைவில் வரவிருக்கும் மாநகராட்சித் தேர்தலுக்கு இப்போதே தயாராவது எனப் பல திட்டங்களை அவர் வைத்துள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சிக்குத் திட்டமிட்ட கையோடு, ஓய்வுக்காக ஆஸ்திரேலியா செல்லவும் விஜய் தயாராகி வருவதால், தவெகவின் அரசியல் களம் அடுத்த சில நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
