தமிழ்நாட்டில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவு, மாநில அளவில் 85.15% என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த அபரிமிதமான வாக்குப்பதிவு அதிகரிப்பிற்கு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் பிரவேசமும், அக்கட்சித் தொண்டர்களின் தீவிரப் பணியும்தான் காரணம் என அக்கட்சியினர் சமூக வலைதளங்களிலும் மேடைகளிலும் தொடர்ந்து கூறி வருகின்றனர். புதிய வாக்காளர்களின் வருகையும், இளைஞர்களின் ஆர்வமுமே இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
இருப்பினும், தவெகவினரின் இந்தக் கருத்தை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “வாக்கு சதவீதம் அதிகரித்ததற்கு தவெகதான் காரணம் என்று சொல்வது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே தவெக வெளியிட்ட அமைச்சரவை பட்டியலைச் சுட்டிக்காட்டிய அவர், இது இல்லாத ஊருக்குப் போகாத வழியைத் தேடுவது போல் கற்பனையானது என எள்ளிநகையாடினார்.
