தெலங்கானா மாநிலம் காமரேட்டி மாவட்டத்தில், கோழிக்கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் தனது கணவரைக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தினக்கூலித் தொழிலாளியான கோதண்ட சிவாஜி, தனது மனைவி லட்சுமியிடம் கோழிக்கறி சமைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், லட்சுமி சமைக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தங்களது வாழ்க்கைச் சூழல் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில், லட்சுமி அரிவாளால் கணவரின் கழுத்தை அறுத்ததில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு இரண்டு மற்றும் ஒரு வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வறுமை மற்றும் அன்றாட வாழ்வாதாரப் போராட்டங்களுக்கு இடையே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்தத் தீவிர முடிவுக்குக் காரணமான மற்ற சூழல்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
