மேற்காசியாவில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவில் புதிய வகை சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் ‘மஹாநகர் காஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது. எரிவாயு கட்டணம் நிலுவையில் இருப்பதாகக் கூறி, போலி குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பி, இணைப்பைத் துண்டிக்கப்போவதாக வாடிக்கையாளர்களை அச்சுறுத்தி அவர்களைத் தங்கள் வலையில் வீழ்த்தியுள்ளனர்.
இந்த மோசடி கும்பல் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்த 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களை ஹேக் செய்து, அவர்களின் வங்கி கணக்குகளிலிருந்து பணத்தைச் சுருட்டியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 2.7 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவது மட்டுமின்றி, புதிய எரிவாயு இணைப்பு கோரும் வாடிக்கையாளர்களிடமும் இக்கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் கவனக்குறைவைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் இத்தகைய ஆன்லைன் மோசடிகளிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
