மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சிவ சேனா கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சுரேஷ் குர்ஜார் தனது 55-வது பிறந்தநாளை மிகவும் வித்தியாசமான முறையிலும், நெகிழ்ச்சியான வகையிலும் கொண்டாடியுள்ளார். ஆடம்பரமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து, சுமார் 51,000 தெருநாய்களுக்கு உணவு வழங்கி தனது பிறந்தநாளை அவர் சிறப்பித்துள்ளார்.
இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்குப் பிறந்தநாள் விருந்து அளிப்பதற்காக, சுரேஷ் குர்ஜார் ஒரு பெரிய குழுவையே இதற்காக நியமித்திருந்தார். சுமார் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நகரம் முழுவதும் சென்று பிஸ்கட், பால் மற்றும் நாய்களுக்கு உகந்த இதர உணவுகளை வழங்கினர். முன்னதாக, தனது வீட்டிலேயே 51 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கேக் ஒன்றை வெட்டி தனது ஆதரவாளர்களுடன் அவர் பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிறந்தநாள் குறித்துப் பேசிய சுரேஷ் குர்ஜார், “ஊமைப் பிராணிகளுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதுகிறேன். வழக்கமான கொண்டாட்டங்களை விட, இது மனதிற்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது” என்றார். விலங்குகள் மீதான இவரது இந்த அன்பு மற்றும் அக்கறை சமூக வலைதளங்களில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
