சென்னை பெரியமேட்டில் உள்ள விடுதி ஒன்றில் காதலர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாரதி பெருமாளும் (21), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவ்யாவும் (21) தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சாதி தடையாக இருந்ததால், பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதன் விளைவாக, நான்கு மாதங்களுக்கு முன்பு பவ்யாவிற்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமண வாழ்க்கை கசந்த நிலையில், கணவரைப் பிரிந்து படிப்பைத் தொடர பவ்யா மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது தனது பழைய காதலரான பாரதி பெருமாளைச் சந்தித்து தனது வேதனைகளைப் பகிர்ந்துள்ளார். மீண்டும் இவர்களது நட்பு நெருக்கமானதைத் தொடர்ந்து, கடந்த 23-ஆம் தேதி பெரியமேடு குமரப்பா தெருவில் உள்ள ஒரு விடுதியில் இருவரும் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.
நேற்று காலை நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், சாவி துவாரத்தின் வழியாகப் பார்த்தபோது பவ்யா கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், பாரதி பெருமாள் தூக்கிலும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த பெரியமேடு காவல்துறையினர் கதவை உடைத்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பவ்யாவிற்கு எலி மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்து, பின்னர் பிளேடால் அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு பாரதி பெருமாள் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து எலி மருந்து பாட்டில் மற்றும் பிளேடு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சாதி மறுப்புக் காதலும், கசந்துபோன திருமண வாழ்க்கையும் இரண்டு இளைஞர்களின் உயிரைப் பறித்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
