“விஜய்யால் திமுகவுக்கு ஆபத்தா?”…. ஸ்டாலின் கையில் இருக்கும் அந்த ‘சீக்ரெட்’ ரிப்போர்ட் – அதிரவைக்கும் பின்னணி…!

By Nanthini on சித்திரை 24, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதிகரித்துள்ள வாக்கு சதவீதமும் இளைஞர்களின் எழுச்சியும் அரசியல் களம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற விவாதம் அனல் பறக்கிறது. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் ஆர்வம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருசேர ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதி வரை இந்த அரசியல் படபடப்பு தொடரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆதரவு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை தரப்பில் இருந்து பெறப்பட்ட ஆரம்பக்கட்ட தரவுகளை வைத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அதிகாரிகளுடனான ஆலோசனையின்போது, திமுக அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த பெண்களின் ஆதரவு தங்களுக்கு முழுமையாக இருப்பதாக ஸ்டாலின் நம்பிக்கையோடு விவாதித்துள்ளார். பொதுவாக ஆளும் கட்சி மீது நிலவும் இயல்பான 5 முதல் 7 சதவீத அதிருப்தி வாக்குகள், இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குச் செல்லாமல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மடைமாறியிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுமார் 3 சதவீத அதிருப்தி வாக்குகளும், குறிப்பிட்ட சதவீத தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளும் விஜய் கட்சிக்குச் சென்றிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

   

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வாக்களித்த விஜய் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளைக் கணக்கிட்டாலும், விஜய் கட்சிக்கு அதிகபட்சமாக 8 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்பதே திமுகவின் தற்போதைய ஆய்வாக உள்ளது. இந்த வாக்குப்பிரிப்பு திமுகவின் வெற்றியைப் பாதிக்காது என்றும், மாறாக அதிமுகவின் வாக்கு வங்கியையே சிதைக்கும் என்றும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர். இந்தச் சூழலில் வாக்குகள் சிதறுவது திமுக மீண்டும் ஆட்சி அமைக்கவே சாதகமாக முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

   

இருப்பினும், திமுக கூட்டணி 200 இடங்களைக் கைப்பற்றும் என்ற முந்தைய இலக்கில் சிறு சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி சுமார் 160 இடங்களைக் கைப்பற்றக்கூடும் என்றும், அதில் திமுக தனித்து 135 முதல் 140 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை அறிக்கையும் இதே போன்ற எண்களை உறுதிப்படுத்தியுள்ளதால், மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஸ்டாலின் மே 4-ஆம் தேதிக்காகக் காத்திருக்கிறார்.