திருப்பதி மாவட்டம் நாராயணவனம் அருகே உள்ள வெங்கட கிருஷ்ண பாளையத்தைச் சேர்ந்த சிமெண்ட் வியாபாரி மோகன், கடன் தொல்லை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மற்றும் லாட்டரி சீட்டு வாங்கியதில் சுமார் 20 லட்சம் ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதால், மோகன் கடும் கடன் பிடியில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று மதியம் சிமெண்ட் கடையிலிருந்து வீட்டிற்குச் சென்ற மோகன், அங்குத் தனது தாய் சந்திரகலா மற்றும் மனைவி ஹரிதா ஆகிய இருவரையும் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தார். பின்னர், தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகக் பொய் கூறி, மகன் கவுசிக் (14) மற்றும் மகள் ஹரிணி (12) ஆகியோரைத் தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மோகன் கடைக்குத் திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மைத்துனர் பாலகிருஷ்ணா, வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் கொலைச் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் சென்ற மோகன், மாலை வரை பல்வேறு இடங்களுக்குச் சுற்றிவிட்டு, இரவு 7 மணியளவில் வேப்பங்குண்டா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்திற்குச் சென்றுள்ளார். தந்தை தற்கொலை செய்யப் போவதை அறிந்த குழந்தைகள், அவரைக் காப்பாற்றப் போராடித் தடுத்தும் பலனில்லை. அப்போது எழும்பூரில் இருந்து கச்சிகுடா நோக்கி வந்த ரயில் மோதியதில், மோகன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மோகன் ஏற்கனவே ரயில்வே வேலையில் இருந்து பாதியில் நின்றவர் என்பதும், ஆன்லைன் சூதாட்டத்தினால் தனது இரண்டு வீட்டு மனைகளையும், மனைவியின் நகைகளையும் இழந்து தவித்ததும் தெரியவந்தது. பணத்தை இழந்து, கடனை அடைக்க முடியாமல் ஏற்பட்ட மன அழுத்தம் ஒரு முழு குடும்பத்தையும் அழித்திருப்பது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நகரி போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
