தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், நடிகை திரிஷா இன்று காலை 11 மணியளவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவர் காரில் வந்து இறங்கியதுமே ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டதால், சிறிது நேரம் கூட்டத்தில் சிக்கித் தவித்த திரிஷா, பின்னர் பாதுகாவலர்களின் உதவியுடன் மையத்திற்குள் சென்றார்.
வாக்குச்சாவடிக்குச் சென்ற திரிஷாவிடம், “இந்தத் தேர்தலில் மாற்றம் இருக்குமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் உள்ளே சென்ற அவர், வாக்களித்து முடித்த பின் தனது அடையாள மை வைக்கப்பட்ட விரலைக் காண்பித்தார். மீண்டும் செய்தியாளர்கள் கேட்டபோது, “கண்டிப்பாக எல்லாரும் போய் ஓட்டு போடுங்கள், இன்று அதை மட்டும்தான் சொல்வேன்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அரசியல் குறித்த நேரடிப் பேச்சுகளைத் தவிர்த்து, குடிமகனாக தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
வாக்களித்துத் திரும்பிய திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மை வைக்கப்பட்ட விரலை உயர்த்திக் காட்டியபடி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் பின்னணியில், விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற “அர்ஜுனரு வில்லு” பாடலின் பின்னணி இசையை ஒலிக்கவிட்டுள்ளார். கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரிஷா இந்தப் பாடலைப் பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சமீபகாலமாக விஜய் மற்றும் திரிஷா குறித்துப் பல்வேறு கிசுகிசுக்களும், தகவல்களும் இணையத்தில் உலா வரும் சூழலில், திரிஷாவின் இந்த இன்ஸ்டா பதிவு ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒரே காரில் வந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது விஜய் படப் பாடலைத் தனது தேர்தல் பதிவிற்குத் திரிஷா பயன்படுத்தியிருப்பது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. திரையுலகினரும் ரசிகர்களும் இந்தப் பதிவை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
