மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மந்தைவெளியில் உள்ள உதவியாளர் சத்தியமூர்த்தியின் வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது, வீட்டின் சமையலறை மற்றும் படுக்கையறை ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு கட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பணத்துடன் சேர்த்து, வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் சரியான மதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக சத்தியமூர்த்தியிடம் தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
