சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேசின் பிரிட்ஜ் பகுதியில் நேற்று இரவு வாகன தணிக்கை நடந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதில் சோதனையிட்டபோது, சுமார் 12 கிலோ 760 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்லாவரத்தில் இருந்து ராயபுரத்திற்கு நகைகளை கொண்டு செல்வதாக வாகனத்தில் வந்தவர்கள் கூறினாலும், அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை எனத் தெரிகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உரிய ஆதாரங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள் அரசு அதிகாரிகளால் முடக்கப்படுகின்றன. முறையாகப் பரிசீலனை செய்த பிறகு, நகைகளுக்கான சரியான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
