ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ரித்தி யாதவ் என்ற இரண்டு வயதுக் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து, அந்தக் குழந்தையின் ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப் போட்டுள்ளது.
விபத்திற்குப் பிறகு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமி, தனது தாய் அருகில் இல்லாததை உணர்ந்து “அம்மா… அம்மா…” என்று கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சை உலுக்கியது. “அழாதே கண்ணா, அம்மா இதோ வந்துவிடுவார்” என்று அங்கிருந்த காவலர்கள் ஆறுதல் கூறியும், எதையும் அறியாத அந்தப் பிஞ்சு குழந்தை தனது தாயைத் தேடி அழுதுகொண்டே இருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கலங்கச் செய்துள்ளது.
உயிரிழந்தவர்கள் குழந்தையின் பெற்றோர் மற்றும் ஒரு உறவினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் அந்தக் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், விபத்தின் கோரத்தையும், தாய்-தந்தையை இழந்து தவிக்கும் அந்தக் குழந்தையின் நிலையும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
