உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப் போப் லியோ XIV கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், “ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் சீரழிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தனது ஆப்பிரிக்கப் பயணத்தின் போது தெரிவித்துள்ளார்.
கேமரூன் நாட்டில் உள்ள புனித ஜோசப் பேராலயத்தில் உரையாற்றிய போப், வளங்களைக் கொள்ளையடித்து லாபத்தை ஆயுதங்களில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு முடிவில்லாத அழிவுச் சுழற்சியையும் வன்முறையையும் தலைவர்கள் ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார். இது ஒரு தலைகீழாக மாறிய உலகம் என்றும், கடவுளின் படைப்புகளைச் சுரண்டும் இத்தகைய செயல்களை நேர்மையான மனசாட்சி கொண்ட எவரும் ஏற்க முடியாது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
ஆயுத மோதல்கள் மற்றும் போர்களை முன்னின்று நடத்தும் தலைவர்கள், ஒரு பொருளை அழிப்பதற்கு ஒரு கணம் போதும், ஆனால் அதைக் கட்டி எழுப்ப ஒரு ஆயுட்காலம் போதாது என்பதை அறியாதது போல நடிக்கிறார்கள் என்று போப் வருத்தத்துடன் குறிப்பிட்டார். பில்லியன் கணக்கான டாலர்களைப் போர் மற்றும் ஆயுதங்களுக்குச் செலவிடுவதால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய போப்பின் இந்த உரை, தற்போது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
