திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர், பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான வழக்கில் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, முரளி தனது முதல் மனைவியின் 13 வயது மகள் மற்றும் இரண்டாவது மனைவியின் 12 வயது மகள் ஆகிய இருவரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பதியப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், தந்தை என்ற உறவையும் மீறி அவர் செய்த இந்தக் கொடூரக் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது.
பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே மகள்களுக்கு வில்லனாக மாறிய இந்தச் செயலுக்கு, நீதிமன்றம் முரளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு தகுந்த பாடமாகவும், நீதியை நிலைநாட்டும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
