எதிர்க்கட்சிகளை திட்டி ஓட்டு வாங்கும் பழக்கம் நமது கூட்டணிக்கு கிடையாது… அதிமுக, பாஜக-வுக்கு பிரேமலதா கொடுத்த ‘சைலண்ட்’ செக்… தருமபுரியை அதிரவைத்த பேச்சு…!!

By Muthu Mani on சித்திரை 11, 2026

Spread the love

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தருமபுரி, நல்லம்பள்ளி, இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தக் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக உருவெடுத்துள்ளதாகவும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் தொகுதிக்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்து வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தங்களது அரசியல் பாணி குறித்துப் பேசிய பிரேமலதா, எதிர்க்கட்சிகளைத் தரக்குறைவாகத் திட்டி வாக்கு சேகரிக்கும் பழக்கம் தங்கள் கூட்டணிக்குக் கிடையாது என்றும், யார் எப்படிப்பட்டவர்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் குறிப்பிட்டார். “துளசியின் வாசம் மாறினாலும் தவசியின் வார்த்தை மாறாது” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் கேப்டன் விஜயகாந்திற்கு இருந்த 50 ஆண்டுகால ஆழமான நட்பை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

   

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கும் விஜயகாந்திற்கும் இடையிலான நெருங்கிய நட்பைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், தாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார். நேற்று காலை திருமாவளவனுடன் தொலைபேசியில் உரையாடியதை உறுதிப்படுத்திய பிரேமலதா, தே.மு.தி.க-விற்கு வி.சி.க முழு ஆதரவு அளித்துத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் என்று அவர் கூறியதாகத் தெரிவித்தார். வி.சி.க போட்டியிடும் தொகுதிகளில் தான் பிரசாரம் செய்ய உள்ளதாகவும், அதேபோல் தான் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில் திருமாவளவன் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் அவர் கூறினார்.

   

இறுதியாக, தி.மு.க தலைமையிலான இந்தக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் 7-வது முறையாக ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று உறுதியளித்த அவர், “அரிவாளால் நெல் கதிர்களை அறுத்து, பானையில் சமைத்து, கைகளால் முரசு கொட்டி உதயசூரியனுக்கு அந்தப் பொங்கலைப் படைப்போம்” என கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களை ஒன்றிணைத்து கவித்துவமாகத் தனது உரையை நிறைவு செய்தார்.