ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மயிரிலையில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, ஒருகட்டத்தில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தத்தளித்தது. அப்போது 7வது வீரராகக் களமிறங்கிய இளம் வீரர் முகுல் சவுத்ரி, ஆவேஷ் கானுடன் இணைந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வெற்றிக்குக் கடைசி 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதில் 52 ரன்களை முகுல் சவுத்ரி மட்டுமே விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. வைபவ் அரோரா வீசிய பந்தில் தோனியின் அடையாளமான ‘ஹெலிகாப்டர் ஷாட்’ மூலம் சிக்ஸர் அடித்து தனது வேட்டையைத் தொடங்கிய அவர், கார்த்திக் தியாகி மற்றும் கேமரூன் க்ரீன் ஓவர்களில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தைத் தன் பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது, மிகுந்த நெருக்கடிக்கு மத்தியிலும் சிக்ஸர்களை விளாசி லக்னோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மொத்தம் 27 பந்துகளைச் சந்தித்த முகுல் சவுத்ரி, 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் அதிரடி காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இவரது ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், “தோனியே மப்டியில் வந்து விளையாடுவது போல் உள்ளது” என சமூக வலைதளங்களில் பாராட்டித் தள்ளி வருகின்றனர். லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், முகுல் சவுத்ரியின் திறமை மீது வைத்த நம்பிக்கையை அவர் இந்த ஆட்டத்தின் மூலம் மெய்ப்பித்துள்ளார். இந்த வெற்றி ஐபிஎல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத ‘பினிஷிங்’ ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.
