ஒரே நாளில் ஈரானை அழிக்க முடியுமா?.. டிரம்ப்பின் மிரட்டலும்.. பின்னணியில் இருக்கும் பேரதிர்ச்சியும்… வளைகுடா நாடுகளுக்கு காத்திருக்கும் பேராபத்து….!

By Nanthini on சித்திரை 7, 2026

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உலகையே உலுக்கி வரும் நிலையில், ஈரானை ஒரே நாளில் அழித்துவிடுவோம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கை நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. பல கோடி மக்கள் தொகையும், பரந்து விரிந்த மலைப்பாங்கான நிலப்பரப்பும் கொண்ட ஈரானை வான்வழித் தாக்குதல்கள் மூலம் சிதைக்க முடியுமே தவிர, முழுமையாகக் கட்டுப்படுத்துவது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாகும். சமீபத்தில் தெஹ்ரான் மற்றும் ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஈரானின் ராணுவக் கட்டமைப்பிற்குச் சேதத்தை ஏற்படுத்தினாலும், இது ஒரு நீண்டகாலப் போரின் தொடக்கமாகவே அமையும்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்தால், அது உலகளாவிய பேராபத்தாக முடியும். குறிப்பாக, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் தங்களின் குடிநீர் தேவைக்காக 90% கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளையே நம்பியுள்ளன. ஈரான் தனது ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் மூலம் இந்த ஆலைகளைத் தாக்கினால், சில நாட்களிலேயே வளைகுடா நாடுகள் கடும் குடிநீர் மற்றும் மின்சாரப் பஞ்சத்தைச் சந்திக்கும். இது அந்த நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையை அடியோடு குலைத்து, நவீன நகரங்களைப் ‘பேய் நகரங்களாக’ மாற்றும் அபாயம் உள்ளது.

   

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை ஈரானின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தப் பாதை வழியாகவே செல்கின்றன. ஈரான் இந்தப் பாதையை மூடினாலோ அல்லது அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கினாலோ, உலக சந்தையில் எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயரும். இது அமெரிக்கா உட்பட ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கடுமையான பொருளாதாரச் சரிவுக்குத் தள்ளும் என்பதால், வளைகுடா நாடுகள் இந்தப் போரைத் தவிர்க்குமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

   

தற்போதைய சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் ஒரே கோரிக்கையாக உள்ளது. ஆனால், ஈரான் தனது இழப்புகளுக்கு ஈடுசெய்யும் வகையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் பிடிவாதமாக உள்ளது. இரு தரப்பும் தங்களின் நிபந்தனைகளில் உறுதியாக இருப்பதால், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால், இந்தப் போர் மத்திய கிழக்கு நாடுகளைத் தாண்டி ஒட்டுமொத்த உலகத்தையுமே பெரும் நெருக்கடியில் ஆழ்த்தும் என்பது நிதர்சனம்.