”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்”.. உங்கள் வீட்டு வாசலில் நிற்பது யார்?… விஜய்யை வெளுத்து வாங்கிய அன்புமணி…!

By Nanthini on சித்திரை 5, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவதால் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் பெரம்பூர் மீது திரும்பியுள்ளது. நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவதையும், ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாகச் சாடினார்.

முக்கியமாக நடிகர் விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் விமர்சித்த அன்புமணி, “மக்களால் அணுக முடியாத ஒரு சட்டமன்ற உறுப்பினர் உங்களுக்குத் தேவையா?” என்று கேள்வி எழுப்பினார். தவறான நபரைத் தேர்வு செய்தால் வாக்காளர்கள் பனையூரில் உள்ள அவர் வீட்டு வாசலில் தான் காத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் பாமக வேட்பாளர் திலகபாமா மக்களுக்காக எப்போதும் களத்தில் நிற்பார் என்றும் அவர் உறுதி அளித்தார். சினிமாவில் நடிப்பவர்கள் மேடையிலிருந்தே ‘டாடா’ காட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள் என்றும், சாமானிய மக்கள் வாழும் இத்தொகுதிக்கு உழைக்கும் வேட்பாளரே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

அடுத்ததாக திமுக அரசின் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்த அவர், ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தாங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார். “சென்னை புறநகர் மக்கள் பாதுகாப்பிற்காகப் படகுகளை வாங்கி வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது; திமுகவிடம் நிர்வாகத் திறமையோ அல்லது தொலைநோக்குப் பார்வயோ இல்லை” என்று சாடினார். முதல்வர் ஸ்டாலின் விளம்பரப் படங்களில் மட்டுமே தோன்றி மக்களை ஏமாற்றுவதாகவும், சாதனை படைத்ததாகக் கூறும் திமுக, கூட்டணி இன்றித் தனித்து நிற்கத் துணிச்சல் இருக்கிறதா என்றும் அவர் சவால் விடுத்தார்.

   

இறுதியாக, திமுகவை “வியாபாரிகள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் கட்சி” என்று விமர்சித்த அன்புமணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே உழைக்கும் மக்களின் கூட்டணி என்று பெருமிதம் கொண்டார். திமுகவில் பணக்காரர்கள் மட்டுமே செல்வாக்கு செலுத்துவதாகவும், ஏழை எளிய மக்களின் நலனைப் பாதுகாக்கத் தங்கள் கூட்டணிக்கு ஒருமுறை வாய்ப்பளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம் என்று முழங்கிய அவர், பெரம்பூர் தொகுதியில் மாற்றத்தைக் கொண்டு வர வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.