சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. கிருத்தார்த்தா என்ற இளைஞர், தனது வீட்டில் பணிபுரியும் ஜோதி என்ற பெண் சமையலறையில் அழுது கொண்டிருப்பதைக் கண்டார்.
மேலும் அதற்கான காரணத்தை வினவியபோது, அன்று தனது பிறந்தநாள் என்றும், தனது தாய் உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் தன்னை அரவணைத்துக் கொண்டாடியிருப்பார் என்றும் ஜோதி கண்ணீருடன் கூறினார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜோதியின் தனிமையையும் வேதனையையும் உணர்ந்த கிருத்தார்த்தா, அவருக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை அளிக்க முடிவு செய்தார்.
View this post on Instagram
“>
இதனால் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு அழகான கேக் வரவழைத்து, ஜோதியின் பிறந்தநாளை கிருத்தார்த்தா உற்சாகமாகக் கொண்டாடினார். எதிர்பாராத இந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்து போன ஜோதி, தனது கையில் இருந்த 500 ரூபாயைக் கொடுத்து அனைவருக்கும் விருந்து வாங்கித் தருமாறு வற்புறுத்தியது பார்ப்பவர்களை மேலும் கண்கலங்கச் செய்தது.
இந்நிலையில் ஏழ்மையிலும் அவரிடம் இருந்த அந்தப் பெருந்தன்மையும், அந்த இளைஞரின் மனிதாபிமானமும் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. “உண்மையான மகிழ்ச்சி பிறரை மகிழ்விப்பதில் தான் இருக்கிறது” என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
