புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் அமைச்சர் ரகுபதியின் பெயரைப் பயன்படுத்தி தப்பித்து வருவதாகவும், இது ஒட்டுமொத்த செட்டியார் சமூகத்திற்கே பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளதாகவும் செட்டியார் படை கழகத்தின் ரஜினிகாந்த் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் தேர்தலில் அமைச்சரைத் தோற்கடிப்பதே தங்களின் இலக்கு எனத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அமைச்சருக்கு எதிரான இந்த அதிருப்தி அலையை அதிமுகவுக்கு சாதகமாக மாற்றும் வகையில், செட்டியார் படை கழகம் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்துவிற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
இதனால் ஆளுங்கட்சி அமைச்சருக்கு எதிராக அவரது சொந்தச் சமூகத்தைச் சேர்ந்த அமைப்பே போர்க்கொடி தூக்கியிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதரவு மாற்றம் திருமயம் தொகுதியின் தேர்தல் முடிவுகளில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
