2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகக் களம் காணும் நிலையில், திருத்தணி தொகுதியின் தவெக வேட்பாளர் வழக்கறிஞர் சத்தியகுமார் தனி ஆளாக வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வழக்கமாக அரசியல் கட்சியினர் பட்டாளம் சூழ பரப்புரை செய்யும் நிலையில், சத்தியகுமார் எவ்வித ஆடம்பரமும் இன்றி டீக்கடைகள் மற்றும் சாலைகளில் செல்வோரைச் சந்தித்து “வெற்றி நிச்சயம்” எனக் கூறித் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். எந்தவொரு கட்சி நிர்வாகியோ அல்லது தொண்டர்களோ அவருடன் இல்லாதது பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தவெக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு உட்கட்சிப் பூசல்களே காரணம் எனக் கூறப்படுகிறது. வேட்புமனுத் தாக்கலின்போது கட்சி நிர்வாகிகளைச் சரியாக ஒருங்கிணைக்கவில்லை என்றும், இளைஞர்கள் குறித்து அவர் அவதூறாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எனினும், பொதுமக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தவும், அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியவுமே தாம் தனியாகச் சென்று பரப்புரை செய்வதாக சத்தியகுமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் கட்சித் தலைமை விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், திருத்தணி பரப்புரை களம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
