உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், திருமணமான முதல் இரவிலேயே மணமகன் தனது புது மனைவியால் சரமாரியாகத் தாக்கப்பட்ட வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில் மணமகன் மணப்பெண்ணை நெருங்க முயன்றபோது, மணப்பெண் அவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மணமகன் வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த மணப்பெண், அவரைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல் மணமகனின் கன்னத்தில் அறைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதல் முற்றிய நிலையில், மணப்பெண்ணின் குடும்பத்தினரும் அங்கு வந்து மணமகனைத் தாக்கியுள்ளனர். இதில் மணமகனின் மண்டை உடைந்து அவர் பலத்த காயமடைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தனக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையில், அந்தப் பெண்ணிற்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்பதும், அவர் வேறு ஒருவரைக் காதலித்து வந்த நிலையில் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் ஆய்வாளர் ஜீத் சிங் கூறுகையில், மணமகள் தன்னைத் தொட அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட மோதல் இது என்றும், தற்போது இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சமரசத்திற்கு முன்வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். திருமணமான முதல் நாளே மணமகன் அடிதடியில் சிக்கிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
