உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், கோடீஸ்வரத் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் நள்ளிரவில் நடந்த நிர்வாணத் தந்திரப் பூசை மற்றும் புதுப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில் அதிபர் வினீத் மிஸ்ரா என்பவர், தனது வீட்டில் குடும்பத்தினர் அனைவரையும் நிர்வாணப்படுத்தி விசித்திரமான தந்திரப் பூசைகளைச் செய்து வந்துள்ளார். சமீபத்தில் திருமணமான அவரது மருமகளை, கணவர் மற்றும் மாமனார் ஆகிய இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைந்து பூசையறையில் அமர வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரின்படி, அவரது மாமனார் அந்தப் பெண்ணின் உடலில் ஆடையின்றிச் சாம்பலைப் பூசி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். பின்னர், குடும்பத்தினர் அனைவரும் நிர்வாண நிலையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரித்துத் தந்திரச் சடங்குகளைச் செய்துள்ளனர். இந்த அருவருப்பான செயலுக்கு அந்தப் பெண்ணின் மாமியார் மற்றும் கணவர் ஆகிய இருவரும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இத்தகைய தந்திரப் பூசைகளைச் செய்வதால்தான் தங்களது குடும்பம் கோடீஸ்வர அந்தஸ்தைப் பெற்றுள்ளதாகவும், தொடர்ந்து செல்வம் பெருக இது அவசியம் என்றும் மாமனார் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாத அந்தப் பெண், எப்படியோ தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை விவரித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தார், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பதிவு செய்த போலீஸார், தந்திரப் பூசை என்ற பெயரில் பெண்ணின் கண்ணியத்தைச் சிதைத்த அந்தத் தொழில் அதிபர் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
