தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… எடப்பாடியை முந்திய விஜய்… லோக்போல் கணிப்பால் ஆடிப்போன அரசியல் களம்….!

By Nanthini on சித்திரை 2, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், லோக்போல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 22 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 41% ஆதரவுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆனால், இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 27.1% வாக்குகளைப் பெற்று, அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் எடப்பாடி பழனிசாமியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுதான்.

தேர்தல் வியூகங்களின்படி, திமுக மெகா கூட்டணியுடன் களம் கண்டு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்திலும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் திமுக தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக லோக்போல் தெரிவிக்கிறது. இக்கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி சுமார் 181 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி 24.1% வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பலத்த ஆதரவைப் பெற்று வருவது இக்கருத்துக்கணிப்பில் தெளிவாகத் தெரிகிறது. அதிமுகவை விடச் சில சதவீத வாக்குகளே தவெக குறைவாகப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சுமார் 8 முதல் 10 தொகுதிகள் வரை வெற்றி பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்குப் புதியவரான விஜய், அனுபவம் வாய்ந்த எடப்பாடி பழனிசாமியை முந்தியிருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

   

மறுபுறம், அதிமுக – பாஜக கூட்டணி வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தின் சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு செலுத்தும் என்றும், ஒட்டுமொத்தமாக 29.5% வாக்குகளை மட்டுமே இக்கூட்டணி பெறும் என்றும் லோக்போல் கணித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தனிநபராகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், விஜய்யின் எழுச்சி அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இறுதி கட்டப் பிரச்சாரங்கள் இன்னும் வேகம் எடுக்க உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் இந்த கணிப்புகளை உறுதிப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.