மகாராஷ்டிராவின் பண்டர்பூர் அரசு மருத்துவமனையில், 6 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட பெரும் மருத்துவ அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் இரு கைகளிலும் கூடுதல் விரல்கள் இருக்கும் ‘இருபக்க பின் அச்சுப் பலவிரல் குறைபாடு’ (Bilateral Postaxial Polydactyly) என்ற பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தான். வலது கையில் இருந்த கூடுதல் விரலால் கடுமையான வலி மற்றும் பொருட்களைப் பிடிப்பதில் சிரமம் இருந்ததால், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். பெற்றோரும் வலது கையில் அறுவை சிகிச்சை செய்ய முறையான ஒப்புதல் அளித்திருந்தனர்.
இருப்பினும், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் வலது கைக்கு பதிலாக, இடது கையில் இருந்த கூடுதல் விரலைத் தவறுதலாக அகற்றியுள்ளனர். இந்தத் தவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுப் புகார் அளித்தனர். ஆனால், மருத்துவமனை தரப்போ குழந்தையின் இரு கைகளிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய திட்டம் இருந்ததாகக் கூறித் தப்பிக்க முயன்றது. இதனை மறுத்த குடும்பத்தினர், இடது கையில் எந்தப் பாதிப்பும் இல்லாதபோது ஏன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பி, இது தேவையற்ற உடல் மற்றும் மன ரீதியான வதை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, சுகாதாரத் துறை உடனடியாக இரண்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய நடைமுறைகளான சரியான உறுப்பைக் கண்டறிதல் மற்றும் ஆவணச் சரிபார்ப்பில் எங்கே தவறு நடந்தது என்பது குறித்து இக்குழு விரிவான ஆய்வு நடத்தும். இந்த விசாரணையின் அடிப்படையில் தவறு செய்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் மருத்துவத் துறையில் நோயாளி பாதுகாப்பு நடைமுறைகளின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
