இஸ்ரேலிய ராணுவத்தின் ரகசிய தகவல்களைக் கசியவிட்டு, ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் எப்போது தொடங்கும் எனக் கணித்துப் பந்தயம் கட்டிய விவகாரத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் சிக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு முன்னதாக நடந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த அதிகாரி, தாக்குதல் நேரம் குறித்த முக்கியத் தகவல்களைத் தனது நண்பருக்குப் பகிர்ந்துள்ளார். இதனைப் பயன்படுத்தி இருவரும் ‘பாலிமார்க்கெட்’ (Polymarket) போன்ற தளங்களில் பந்தயம் கட்டி, சுமார் 1,62,663 டொலர்களை லாபமாக ஈட்டியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தாக்குதலுக்காக இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானை நோக்கிப் புறப்பட்டபோது கூட, அந்த அதிகாரி உடனுக்குடன் கூடுதல் தகவல்களைத் தனது நண்பருக்கு வழங்கியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இது அவர்கள் பந்தயத்தில் துல்லியமாக வெற்றி பெற உதவியுள்ளது. இந்த லாபத் தொகையைப் பிரித்துக் கொண்டதில், அந்த ராணுவ அதிகாரிக்கு கிரிப்டோகரன்சி மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 12 நாட்கள் நீடித்த அந்தப் போர் எப்போது முடியும் என்பது போன்ற பல முக்கியத் தருணங்கள் குறித்தும் இவர்கள் தொடர்ந்து பந்தயம் கட்டி விளையாடியது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் துரோகச் செயலுக்காக அந்த அதிகாரி மற்றும் அவரது நண்பர் மீது பாதுகாப்பு விதிமீறல், லஞ்சம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் டெல் அவிவ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட இவர்களது வழக்கு தொடர்பான ஊடகத் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அதிரடித் தகவல்கள் வெளியாகின. தற்போது, விசாரணை முடியும் வரை இருவரையும் தொடர்ந்து காவலில் வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
