ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நாகேலி சீனிவாஸ் என்பவருக்கும் ஜோதி என்பவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தனது மனைவியின் லட்சியத்திற்குத் துணையாக இருந்த சீனிவாஸ், அவரை ஊக்கப்படுத்திப் படிக்க வைத்தார். கணவரின் முழு ஆதரவால் ஜோதிக்குக் கலால் துறையில் அரசு வேலையும் கிடைத்தது. ஆனால், வேலை கிடைத்த சில காலத்திலேயே ஜோதி தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்களது இல்லற வாழ்க்கை கசக்கத் தொடங்கியது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜோதி திடீரென சீனிவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறைப் புகார்களை அளித்தார். அதே சமயம் விவாகரத்து நடைமுறைகளும் தொடங்கப்பட்டதால், சீனிவாஸ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பொய்ப் புகார்கள் மற்றும் தொடர் மிரட்டல்களைத் தாங்க முடியாமல், சீனிவாஸ் இறுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோதி மற்றும் அவரது உறவினர்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு ஏணியாக இருந்த கணவருக்கே நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
