வளைகுடாப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்திற்கு இடையே, உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்மஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் தொடங்கியதிலிருந்து இந்த முக்கிய நீர்வழித்தடம் மூடப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதனை மறுத்துள்ளார். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக், வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் ஈரானுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதால், அவை பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போதைய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு தனது எதிரி நாடுகளுக்கு ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பதற்றத்திற்கு காரணமான அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சில வளைகுடா நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல அனுமதி இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் நோக்கிச் சென்ற ‘செலன்’ என்ற கப்பல் உரிய அனுமதியின்றி பயணித்ததால் தடுத்து நிறுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஈரான், இப்பிராந்தியம் ஒரு போர் மண்டலம் என்பதால் எதிரிகளின் கப்பல்களை அனுமதிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்தத் தடம் ஈரானின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் ஈரான் தனது அதிகாரத்தை நிலைநாட்டி வருவதால், சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமான நிறுவனங்கள் முதல் சாதாரண டீக்கடைகள் வரை அனைத்து வணிகங்களிலும் செலவுகள் அதிகரித்து, அதன் நேரடிப் பாதிப்பை பொதுமக்கள் விலைவாசி உயர்வு மூலம் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
