தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வாழ்வியல் தத்துவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மற்றவர்கள் உங்களால் முடியாது என்று சொல்வதையோ அல்லது உங்களைப் பற்றி விமர்சிப்பதையோ கண்டு கொள்ளாதீர்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரிடமும் பல குறைகள் இருக்கும்போது, அடுத்தவர்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது என்றும், தேவையற்றவர்களின் பேச்சுகளை நினைத்து வருந்துவது நமது லட்சியப் பயணத்தைத் தடுக்கும் என்றும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மனதில் நேர்மறையான எண்ணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டால், நாம் அடைய வேண்டிய இலக்கை மிக விரைவாக அடைய முடியும் என்று செல்வராகவன் கூறியுள்ளார். மற்றவர்களின் கருத்துகளுக்காக நேரத்தைச் செலவிடாமல், நமது முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவரது பதிவின் சுருக்கமாக உள்ளது. தற்போது ‘புதுப்பேட்டை 2’ மற்றும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ போன்ற படங்களில் பிஸியாக இருக்கும் வேளையில், செல்வராகவன் பகிர்ந்துள்ள இந்த ஊக்கமளிக்கும் கருத்துக்கள் இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
