BREAKING: தமிழகத்தையே உலுக்கிய கொடூரம்… சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!

By Nanthini on பங்குனி 23, 2026

Spread the love

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் இருவரும் காவல்துறையினரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில், கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, உயிரிழந்தவர்களின் உடலில் இருந்த காயங்கள் காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் ஏற்பட்டவை என்பது மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ரேவதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், காவலர்களின் அத்துமீறலை நீதிமன்றத்தில் தெள்ளத்தெளிவாக நிரூபித்தன. இடையில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பால்துரை உயிரிழந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை தீவிரமாகத் தொடர்ந்தது.

   

உயர்நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், தற்போது மதுரை அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலே காரணம் என்பதை உறுதி செய்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என அறிவித்தார். சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே அத்துமீறலில் ஈடுபட்டது இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

   

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கான தண்டனை விவரங்கள் வரும் ஏப்ரல் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளாகத் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்து நீதிக்காகப் போராடி வந்த ஜெயராஜின் குடும்பத்தினருக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய ஆறுதலாகவும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் காவலர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.