ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், உலக வர்த்தகத்தின் முக்கிய மையமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சூழலில், இந்தியக் கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது இந்தியாவின் ராஜதந்திர வெற்றிக்குச் சான்றாகப் பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் எரிசக்தி தேவையில் 20 சதவீதம் இந்த வழியாகவே நடைபெறுவதால், இந்தப் பாதை இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மிக அவசியமானதாக உள்ளது.
சமீபத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் சுமார் 22 இந்தியக் கப்பல்கள் அங்கு சிக்கித் தவிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தப் பதற்றமான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானுடன் தொலைபேசி வாயிலாக நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, இந்தியக் கப்பல்களுக்காக ஈரான் ஒரு தனிப் பாதுகாப்பு வழித்தடத்தை (Dedicated Corridor) அமைத்துக் கொடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியக் கப்பல்கள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாகத் தங்கள் பயணத்தைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
லாய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் (LLI) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் லாராக் தீவைச் சுற்றியுள்ள ஒரு புதிய கடல்வழிப் பாதையை இந்தியக் கப்பல்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இது வழக்கமான கப்பல் போக்குவரத்துப் பாதை அல்ல என்றாலும், ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) இந்தியக் கப்பல்களை எளிதாக அடையாளம் கண்டு பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியக் கப்பல்கள் கூட்டமாக ஒன்றன் பின் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்று ஈரான் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே இரண்டு கப்பல்கள் இந்த புதிய பாதையில் பாதுகாப்பாகப் பயணித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்தியாவுடனான தனது நீண்டகால நட்புறவை ஈரான் மதிப்பது சர்வதேச அரசியலில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் மேகங்களுக்கு இடையே, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, மோடி அரசின் வெளியுறவுத் துறைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் விநியோகம் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
