பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், இதனால் அவர் அதிருப்தியில் அக்கட்சியை விட்டு விலகப் போவதாகவும் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ள சரத்குமார், கட்சியில் தமக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறான தகவல் என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும், நாளை நடைபெறவுள்ள தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் என்றும், இதனை வைத்து தேவையில்லாத யூகங்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
