உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு, ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாக மாறியுள்ளது. நீண்ட நாட்களாகத் தங்களுக்குள் இருந்த குடும்பப் பிரச்சினையால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் இணையதளத்தில் “கணவனை எப்படிக் கொலை செய்வது?”, “கொலை செய்த பிறகு காவல்துறையிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி?” மற்றும் “விஷம் கொடுத்துக் கொல்வது எப்படி?” போன்ற திடுக்கிடும் தகவல்களைத் தேடியுள்ளார்.
மேலும் தற்செயலாக மனைவியின் அலைபேசியைப் பார்த்த கணவர், இந்தத் தேடல் வரலாற்றைக் கண்டு உறைந்து போனார். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த கணவர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மனைவியின் இணையதளத் தேடல் விவரங்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இணையத்தில் எதைப் பார்த்தாலும் அதைச் செய்யத் துணியும் இக்காலச் சூழலில், இதுபோன்ற தேடல்கள் சமூக வலைத்தளங்களின் எதிர்மறைத் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்பொழுது இந்தப் புகாரைத் தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
