காதல் திருமணம் செய்த பேரன்… “என் பொண்டாட்டிய பாத்துக்கோங்க தாத்தா..”மருமகளை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற மாமனார்… திருப்பத்தூரில் அரேங்கேறிய பயங்கர சம்பவம் …!!

By Muthu Mani on பங்குனி 20, 2026

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்பத் தகராறில் மருமகளை மாமனாரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலூர் கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யு என்பவர், சென்னையில் பணியாற்றியபோது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பிரதீபா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்திற்கு அபிமன்யுவின் தந்தை முனியன் மற்றும் அவரது மூன்றாவது மனைவி கவிதா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி மோதல்கள் வெடித்த நிலையில், இது தொடர்பாக உமராபாத் காவல் நிலையத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது நுங்கு வியாபாரம் செய்து வரும் அபிமன்யு, பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிட்டதால், தனது மனைவி பிரதீபாவிற்கு பாதுகாப்பாக இருக்குமாறு தனது தாத்தா சாமுண்டியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு கவிதா மீண்டும் பிரதீபாவிடம் சாதி ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த சாமுண்டி தட்டிக்கேட்டும் கவிதா அடங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர் சாமுண்டி, தான் வைத்திருந்த நுங்கு வெட்டும் கத்தியால் கவிதாவின் கழுத்தை சரமாரியாக வெட்டியுள்ளார்.

   

இந்தக் கொடூரத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கவிதா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற முனியனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த உமராபாத் போலீசார், காயமடைந்த முனியன் மற்றும் முதியவர் சாமுண்டி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கவிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

   

காதல் திருமணத்தால் ஏற்பட்ட மோதல், ஒரு கொலையில் முடிந்தது பாலூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரனின் மனைவியைக் காக்க நினைத்த தாத்தா, தனது மருமகளையே வெட்டிக்கொலை செய்த விபரீத சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப உறவுகளுக்குள் நிலவிய சாதிப் பாகுபாடும், சகிப்புத்தன்மையற்ற போக்கும் ஒரு உயிரைப் பறித்ததோடு, முதியவர் ஒருவரை கொலையாளியாகவும் மாற்றியுள்ளது வேதனையளிக்கிறது.