மும்பை பாண்டுப் பகுதியைச் சேர்ந்த 46 வயது பாதுகாப்பு ஊழியரின் மனைவி, ஏற்கனவே மாமியாரின் நகைகளைத் திருடிய வழக்கில் சிறை சென்று திரும்பியவர். சிறையிலிருந்து வந்த பிறகு அவர் தன் கணவருடன் வாழாமல், அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு சச்சின் வசந்த் கார்கே என்பவருடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த கணவர், தன் மனைவியின் நடத்தையைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
கடந்த மார்ச் 16-ஆம் தேதி இரவு, அந்தப் பெண் தனது கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் கணவர் திடீரென விழித்துப் பார்த்தபோது, அருகில் படுத்திருந்த மனைவியைக் காணவில்லை. அவர் நிச்சயம் தனது கள்ளக்காதலன் சச்சின் வீட்டிற்குத்தான் சென்றிருப்பார் எனச் சந்தேகித்த கணவர், ஆத்திரத்துடன் சச்சினின் வீட்டிற்கு விரைந்து சென்று கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், ஆத்திரமடைந்த அவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தார்.
அங்குத் தனது மனைவி சச்சினுடன் இருப்பதைக் கண்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கணவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியைக் குத்திக் கொலை செய்ய முயன்றார். இந்தத் தாக்குதலால் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
