திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்த 60 வயது வனராஜ், தனது கடையில் ஓட்டுநராகப் பணியாற்றிய மாயாண்டி என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயாண்டியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால், அவரை வனராஜ் வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டி, தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு வனராஜை மிரட்டியுள்ளார். இதற்கு வனராஜ் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த மாயாண்டி அங்கிருந்த இரும்புக் கம்பியால் வனராஜின் தலையில் ஓங்கித் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வனராஜ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த விக்ரமசிங்கபுரம் போலீசார், தலைமறைவாக இருந்த மாயாண்டியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளியையே தொழிலாளி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
