அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியில் வசிக்கும் ஜிட்டு கோகாய் என்பவரது குடும்பம், கடந்த 14 மாதங்களாக சிலிண்டர் இல்லாமலேயே பூமிக்கு அடியிலிருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவை வைத்துச் சமையல் செய்து வருகிறது. தங்கள் வீட்டுத் தேவைக்காகக் கிணறு தோண்டியபோது, எதிர்பாராதவிதமாகத் தண்ணீருக்குப் பதில் எரியும் தன்மை கொண்ட வாயு வெளியேறியுள்ளது. இந்த இயற்கை மாற்றத்தை உணர்ந்த அவர்கள், ஒரு குழாய் மூலம் அந்த வாயுவை நேரடியாக அடுப்பிற்கு இணைத்துச் சமையல் எரிவாயுவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த இலவச எரிவாயு அக்குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைத்தாலும், இதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் கவலை அளிப்பதாக உள்ளன. எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, வெறும் தீக்குச்சியைக் கொண்டு குழாயைப் பற்ற வைப்பதும், சமையல் முடிந்ததும் கல்லை வைத்துக் கசிவை மூடுவதும் எந்த நேரத்திலும் பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, அதிகாரிகள் இந்த இடத்தைச் சரியான முறையில் ஆய்வு செய்து, அக்குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்க வேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
