பெங்களூருவில் பொது இடத்தில் ஆடை அணிவது தொடர்பாக யூடியூபர் ஒருவரை மூதாட்டி ஒருவர் கடுமையாகச் சாடிய காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும், சமூக ஊடகப் பிரபலமுமான ஸ்ரேயான்சி, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களுக்காகப் பொது இடங்களில் புகைப்படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வாறு ஒரு பொதுச் சாலையில் அவர் ‘போட்டோஷூட்’ நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூதாட்டி ஒருவர் ஸ்ரேயான்சியின் ஆடையைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்து, அவரைப் பகிரங்கமாகத் திட்டியுள்ளார்.
இந்தத் திடீர் மோதலால் அந்த இடமே பரபரப்பானது. மூதாட்டி ஒருமையில் திட்டிய போதிலும், நிலைமை மோசமடையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்ட ஸ்ரேயான்சி, மிகவும் நிதானமாகச் செயல்பட்டார். அவர் அந்த மூதாட்டியிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டு, அவரைச் சமாதானப்படுத்த முயன்றார். ஒரு நாகரீகமான முறையில் இந்தப் பிரச்சினையை அவர் கையாண்ட விதம், அங்கிருந்தவர்களையும் இந்தக் காணொளியைப் பார்ப்பவர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே சுமார் 14 லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகின்றது. இணையவாசிகள் இது குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்; ஒரு தரப்பினர் மூதாட்டியின் செயலைக் கண்டித்தாலும், மற்றொரு தரப்பினர் பொது இடங்களில் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இருப்பினும், ஸ்ரேயான்சி காட்டிய பொறுமை மற்றும் முதியவருக்கு அவர் அளித்த மரியாதைக்காகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
