2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் தலைவர் G.B. பச்சையப்பன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்படப்போவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்திய ‘சிவப்பு-மஞ்சள்-சிவப்பு’ நிறத்திலான கொடிக்கு எதிராக, அது தமது சமூகத்தின் அடையாளத்தை ஒத்திருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் பச்சையப்பன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சேர்க்கை, வடதமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
