தமிழக அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளில், திமுக கூட்டணி கடந்த 2021 தேர்தலில் 38 இடங்களைக் கைப்பற்றி அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்கிறது. வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக, தற்போது அங்கு நிலவும் அரசியல் சூழல் தங்களுக்குச் சாதகமாக இல்லை எனக் கருதுகிறது. குறிப்பாக விவசாயம், நீர்வள அரசியல் மற்றும் வலுவான சமூகக் கட்டமைப்பு போன்றவை திமுகவிற்கே சாதகமாக இருப்பதால், இந்த முறை டெல்டாவில் அதிக ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை என அதிமுக தலைமை ரகசியத் திட்டம் தீட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய கள நிலவரப்படி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக மிகவும் பலவீனமாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, சுமார் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளைத் தனது கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் அமமுக ஆகியவற்றிடம் ஒப்படைக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாராம். குறிப்பாக வன்னியர் வாக்குகள் நிறைந்த நாகை, தஞ்சை பகுதிகளில் அன்புமணிகும், தனது சொந்த மண் என்பதால் டிடிவி தினகரனுக்கும் அதிக இடங்களை “தள்ளிவிட” எடப்பாடி கணக்குப் போடுகிறார். இது அதிமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த “டெல்டா தந்திரத்தை” மோப்பம் பிடித்துள்ள அன்புமணி ராமதாஸும், டிடிவி தினகரனும் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாக உள்ள தொகுதிகளைத் தங்கள் தலையில் கட்டுவதை ஏற்கக் கூடாது என்பதில் இருவருமே உறுதியாக உள்ளனர். பிஜேபி ஏற்கனவே டெல்டாவில் ஆர்வம் காட்டாத நிலையில், கூட்டணி கட்சிகளுக்குள் எழுந்துள்ள இந்த முரண்பாடு தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டெல்டா அரசியலில் அதிமுக கூட்டணியின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
