திரைப்படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலிப்பதுண்டு. அந்த வகையில், நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கொரியர் அலுவலகம் நடத்துவார். அப்போது ஒருவர் தனது குடும்பத்தையே மூட்டைக்குள் கட்டி, பஸ் டிக்கெட் செலவை மிச்சப்படுத்த கொரியரில் அனுப்ப முயல்வார். பார்ப்பதற்குச் சிரிப்பை வரவழைத்த இந்தச் சம்பவம், தற்போது பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அரங்கேறியுள்ளது. உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகைக் காலங்களில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலையும், பேருந்து டிக்கெட் தட்டுப்பாட்டையும் மையமாக வைத்து இந்தச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தனது தந்தையை ஒரு பெரிய மூட்டைக்குள் வைத்து கட்டி, கொரியர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டையைத் திறந்து பார்த்தபோது, உள்ளே அந்த பெண்ணின் தந்தை இருப்பதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். விசாரணையில், பண்டிகைக் காலங்களில் ஊருக்குச் செல்ல பேருந்து டிக்கெட் கிடைப்பதில்லை என்பதையும், அந்தச் சிரமத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஒரு ‘ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்வது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என போலீசார் அந்தப் பெண்ணை எச்சரித்தனர். பின்னர், தாங்கள் செய்தது தவறு என்றும், இனி இது போன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட மாட்டோம் என்றும் அந்தப் பெண்ணும் அவரது தந்தையும் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். நகைச்சுவைக்காகச் செய்யப்பட்டாலும், இச்சம்பவம் பெங்களூரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
