அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநராக இருந்த ஜோ கென்ட் (Joe Kent), ஈரான் உடனான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “என்னால் எனது மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட முடியாது” என்று குறிப்பிட்டுள்ள அவர், அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எழுதிய கடிதத்தில், இந்த போர் தேவையற்றது என்றும் ஈரானால் அமெரிக்காவிற்கு உடனடி ஆபத்து ஏதுமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த போரானது அமெரிக்காவின் நலனுக்காகத் தொடங்கப்படவில்லை என்றும், இஸ்ரேல் மற்றும் அதன் செல்வாக்கு மிக்க ஆதரவு குழுக்களின் அழுத்தத்தின் காரணமாகவே அமெரிக்கா இதில் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து விலகிய முதல் மூத்த அதிகாரி இவராவார். ஈரானிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கோலம் ரேசா சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில் இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
ஜோ கென்ட்டின் இந்த முடிவை விமர்சித்துள்ள அதிபர் ட்ரம்ப், அவர் பாதுகாப்பில் பலவீனமானவர் என்றும் அவர் வெளியேறுவது நல்லது என்றும் கூறியுள்ளார். முன்னாள் ராணுவ வீரரான ஜோ கென்ட், ஈராக் போருடன் தற்போதைய சூழலை ஒப்பிட்டு, ஆதாரமற்ற காரணங்களுக்காக அமெரிக்கா மீண்டும் ஒரு போரில் ஈடுபடுவதாகக் கவலை தெரிவித்துள்ளார். இந்த போர் காரணமாக இதுவரை ஈரானில் 1,300 பேரும், லெபனானில் 880 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
