ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணியை ஆதரிக்கும் முடிவை எடுத்தது முதல், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் விளைவாக, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்ட திருவையாறு முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜி.எம். சுப்ரமணியன், தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்ட அவர், எதிர்வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பாடுபடுவேன் என உறுதி அளித்துள்ளார். நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்களே அடுத்தடுத்து தன்னை விட்டுப் பிரிந்து செல்வது, அரசியல் களத்தில் ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
