தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைக் கண்டித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை மிகக் கடுமையாகச் விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.
விஜய் தனது பதிவில், “கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சரே, பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?” என்று காட்டமாகக் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், “கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்” எனத் தனது அரசியல் ரீதியான நேரடித் தாக்குதலைப் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் விஜய் சாடியுள்ளார். தூத்துக்குடி சிறுமி விவகாரத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
