தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடிக்கிறது. கடந்த தேர்தலில் தலா 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், கூட்டணியில் தற்போது மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குறைவான தொகுதிகள் குறித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன. கடந்த முறை வழங்கிய 6 இடங்களையாவது உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், திமுக அதற்குச் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆலோசனை செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த இந்த முரண்பாடு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
