தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே அவருக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸின் வலதுகரமாக நீண்டகாலம் செயல்பட்டு வந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, திடீரென மீண்டும் அதிமுகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இது ஓபிஎஸ் தரப்புக்குச் சங்கடத்தை உருவாக்கியுள்ள நிலையில், கிருஷ்ணமூர்த்தி தற்போது அதிமுகவில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்து, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று அதிமுகவில் இணைத்தார்.
மேலும் இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குப் பூங்கொத்துகளுடன் ஊர்வலமாகச் சென்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுகவில் இணைந்த புதிய நிர்வாகிகளை வரவேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ், வரவிருக்கும் தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்தி, கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாக உழைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
