தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “விஜய்யின் பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால், அவருடைய தேர்தல் வாக்குறுதிகள் அந்த அளவுக்கு ‘வொர்த்’ இல்லை” என்று அவர் சாடியுள்ளார். பிற மாநிலங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பி செய்து விஜய் வெளியிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், பல திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதைக்கூட அறியாமல் அவர் வாக்குறுதிகளை அளிப்பதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, திருமணத்தின் போது பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு அரை சவரன் தங்க நகை வழங்குவோம் என்ற விஜய்யின் வாக்குறுதிகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்று வேல்முருகன் சுட்டிக்காட்டினார். இத்தகைய வாக்குறுதிகள் பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றவை என விமர்சித்த அவர், திமுகவின் ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்ற வாக்குறுதிகளோடு இவற்றை ஒப்பிட முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், விஜய் ஆரம்பத்தில் எதை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கினாரோ, அதே கொள்கை கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்தால் மக்கள் அவரை நிராகரிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார். விஜய் மீது நேரடியாகத் தனது அதிருப்தியைப் பதிவு செய்த வேல்முருகன், அரசியலில் அடிப்படைப் புரிதல் இல்லாமல் வாக்குறுதிகளை வெளியிடுவதாகத் தனது காட்டமான விமர்சனத்தைப் பதிவு செய்தார்.
இதேவேளையில், தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மற்றும் கடன் சுமை குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த வேல்முருகன், திமுக அரசின் நிதி மேலாண்மையை ஆதரித்துப் பேசினார். மக்கள் நலத்திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் திமுக அரசு நிதியைச் சரியாகத் திட்டமிட்டு ஒதுக்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வருகின்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
